"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழியை, தங்கள் சமுதாயத்துக்கு இடப் பட்டக் கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு, தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தம் குடும்பத்தாருக்காகப் பொருளீட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறது தமிழக முஸ்லிம் சமுதாயம்.
"எம்புள்ள சவூதியிலே இருக்கான்"
"எங்கண்ணன் துபாயிலே இருக்காரு"
"என் ஊட்டுக்காரங்க கொய்த்தில இருக்காங்க"
முஸ்லிம் சமுதாய மக்கள் பெருமை பொங்க விடுக்கும் அறிக்கைகளில் அவன் என்னவாக இருக்கிறான்? அவரு என்னவாக இருக்கிறார்? அவங்க என்னவாக இருக்காங்க? என்கிற முக்கியத் தகவல் மட்டும் இருக்காது. கேட்டாலும் அந்தத் தகவல் சொல்லப்பட மாட்டாது.
ஏனெனில், வெளிநாடுகளில் பணியாற்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் கட்டிட தொழிலில் கல் தூக்கி கொடுத்தோ , சாலைகளை வெட்டிக் குழாய் போட்டோ, தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்தோ கிடைக்கும் சம்பளத்தில் சுகமான, சொகுசான வாழ்க்கை வாழப் பழகி விட்ட நமது சமுதாயச் சொந்தங்களுக்கு இந்த முக்கியத் தகவல் என்பது தேவையில்லாத ஒன்று.
மேற்சொன்ன கடின உழைப்பு நிறைந்த பணிகளைத் தவிர்த்து, அத்திப் பூத்தாற்போல் 'ஆஃபீஸ் பாய்' பணியில் இருப்பவர்களது பராக்கிரமம், "கம்பெனியே தம்பி தலையிலேதான்" என்கிற அளவுக்கு அவர்தம் குடும்பத்தாரால் அவ்வப்போது அதீத விளம்பரத்துக்குள்ளாகும்.
தன் கண்ணெதிரே பல நாடுகளைச் சேர்ந்த, நம் நாட்டைச் சேர்ந்த, தன்னைவிடச் சின்னப் பையன்களான பிற மதத்தவர்கள் ஏ.ஸி அறைகளில் உட்கார்ந்து கொண்டு தூசு படாமல் வேலை செய்து ஐந்திலக்கச் சம்பளம் வாங்குவதைப் பார்த்து ஏங்கும் நம் சமுதாயச் சொந்தங்களின் இந்த நிலைக்கு யார் காரணம்?
விடை தேட தனியொரு ஆய்வுக்காகக் காலவிரயம் செய்ய வேண்டிய தேவை ஏதும் இல்லை. உடலுக்கு ஒவ்வாக் கடும் குளிரிலும் சூடிலும் இரத்தத்தை வியர்வையாக்கியப் பாமரனின் மறுமைக்கான சிறு சேமிப்பில் ஒய்யாரமாக வளைகுடா பவனிவரும் கட்சி/இயக்கத் தலைவர்களின் புண்ணியத்தில் சமுதாயத்திடம் அதற்கான பதில் தயாராகவே உள்ளது.
ஆங்கிலேயரின் ஆட்சியில் நம் நாடு அடிமைப் பட்டுக் கிடந்தபோது, "அறிவு தேடுவது முஸ்லிமான ஆண்-பெண்களின் கடமையாகும்" என்ற நபிமொழிக்கு எதிராக, நாட்டுப் பற்று என்பது வெறியாக மாறிப்போய், "பரங்கியன் பாஷை படிப்பது ஹராம்" என்று முட்டாள்தனமான ஃபத்வா வெளியிட்ட - தம் முட்டாள்தனத்துக்கு விலையாக முழுச் சமுதாயமும் எத்துணை இழப்புகளை எத்தனை ஆண்டுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறியாத - நம் முன்னோர்கள்தாம் இந்த இழிநிலைக்குக் காரணகர்த்தாக்கள்.
காரணம் என்னமோ கசப்பானது தான். ஆனால் இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான் முன்னோர்களின் மீது பழியைப் போட்டு முடங்கிக் கிடப்போம்? என்ற கேள்விக்குத் தான் பதிலில்லை.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஒருவரின் சராசரி வயதை வைத்துக் கணக்கிட்டால், பரங்கியன் நாட்டைத் துறந்து ஒரு தலைமுறை வயதாகப் போகின்றது. 60 வருடங்கள் கடந்த பின்னரும் அறிவை வளர்க்க/கல்வி கற்க, முன்னோர்களின் "ஆங்கிலேய பாஷை ஹராம்" ஃபத்வாவின் மீது பழியைப் போடுவது அறியாமையா? அல்லது அறிவீனமா?
எதிர்காலச் சமுதாயத்தின் தேவைகளுக்குக் கடந்த காலச் சமுதாயத்தின் மீது பழியைப் போட்டு கதை பேசி இருப்பது, அடுத்த தலைமுறைக்கு இச்சமுதாயம் செய்யும் மிகப்பெரிய துரோகம் அன்றி வேறென்ன? காரணம் கூறி வாளாவிருப்பதை விட, காரணம் அகல வழிமுறை தேடுவதன்றோ அறிவார்ந்த செயல்?.
சமுதாய அவலம் அகல வழிமுறை தேடும் பயணத்தில்.....நேற்று (07.04.2008) திங்கட் கிழமையின் நாளிதழ்களில் இடம் பிடித்துக் கொண்ட ஒரு செய்தி:
கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு இல்லை. முஸ்லிம் சமுதாயத்தில், 5 சதவீதம் ஓரளவு வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைத்து, ஏன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கக் கூடாது? உலகத்தரமான சட்டக் கல்லூரியை உருவாக்கலாம். மைனாரிட்டி என்ற பெயரில் யார் யாரோ கல்லூரி தொடங்கும் போது இது சாத்தியம்தான். முஸ்லிம்கள் பிளஸ்-2 வரையாவது படித்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி அளிக்கும் மையங்களை உருவாக்க வேண்டும்.
95 சதவீத முஸ்லிம்கள் பாட்டாளிகள். பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக உழைக்கிறார்கள். பங்கேற்பதில் முன்னுரிமை என்ற வகையில், இத்தனை பங்கு முஸ்லிம்களுக்கு வேண்டும் என்று போராடுங்கள். போராட்ட களத்தில் நில்லுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
கல்வியில் பின்தங்கி இருக்கும் இஸ்லாமியர்களை முன்னேற்ற ஐ.ஐ.டி (Indian Institute of Technology), ஐ.ஐ.எம்(Indian Institute of Management) போன்ற உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்குங்கள்.
மேற்கண்டவாறு ஆலோசனையும் தார்மீக ஆதரவும் அளித்திருப்பவர் முஸ்லிம்களுக்கு 'இதயத்தில்' இடம் கொடுத்து வைத்திருக்கும் நம் "மஞ்சள் துண்டு" Ex-CM அல்லர். முஸ்லிம்களின் அரசியல் கட்சி/கழகங்களைச் சேர்ந்த தலைவர் அல்லர். "ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய ஆதரவும் தங்களுக்குத்தான்" என்று பெருமை பேசும் முஸ்லிம்களின் பல இயக்கங்களின் ஒரு தலைவருமல்லர்.
மேற்கண்ட பயனுள்ள யோசனையை முன்வைத்திருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், மருத்துவர் ராமதாஸ் ஆவார். அவருக்கு நமது ஆழிய நன்றி உரித்தாகட்டும்!
அவருடைய சொல் நம் சமுதாயச் செல்வந்தர்களின் காதுகளில் விழுமா? நம் சமுதாயச் சொந்தங்களுக்கு இனியாவது கல்வி என்பது கடமையென்றாகுமா?
காலம் பதில் சொல்லட்டும்.

SHIRK

மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுவதும் ஷிர்க்கே..

வானம், பூமியிலுள்ள மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறிய முடியாது. அல்லாஹ் கூறுகிறான், '(நபியே) சொல்வீராக! அல்லாஹ்வைத்தவிர வானம், பூமியிலுள்ள எவருமே மறைவானவற்றை அறிய மாட்டார்கள்.

அல்லாஹ்வைத்தவிர, வேறு யாருக்கும் ஒரு காலமும் மறைவானவற்றை அறிய முடியாது. அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்காகவோ, அவனால் அனுப்பட்ட நபியாகவோ, அவனது உண்மையான ஒரு அடியானாகவோ, பின்பற்றத்தக்க ஒரு பெரும் அறிஞராகவோ இருந்தாலும் சரியே! இன்னும் யார் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மறைவானவற்றை அறிய முடியாது.

அல்லாஹ் தனது இறைத்தூதர்களுக்கு வஹியின் மூலம் அறிவித்த ஒரு சில வியங்களைத்தவிர, காபிர்களின் சூழ்ச்சிகள், மறுமை நாளின் அடையாளங்கள் இது போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.


ஏதோ ஒரு வழியின் மூலம் தமக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுவோர், மணிக்கட்டில் தாயத்துக் கட்டி அல்லது தட்டில் ஓதுவதன் மூலம், அல்லது நட்சத்திரங்களை வைத்துக்குறி பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம், அல்லது சூனியம், ஜோஷியம் போன்றவைகள் மூலம் பலாபலன்கள் சொல்லக்கூடியவர்கள் அனைவருமே நிராகரிப்பாளர்களான பெரும் பொய்யர்களே.

குறிகாரர்கள், சூனியம் செய்வோர் போன்றோர்கள் சிலவேளை காணாமற்போன பொருட்கள், மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைச் சரியாகக் கணித்துச் சொல்லி விடுகின்றார்களே என்று சிலர் கேட்கலாம். ஆனால் இவையெல்லாம் தீய ஷைத்தான்களுக்கு இவர்கள் வழிபடுவதன் மூலம் அவை கற்றுக் கொடுக்கும் தகவல்களே இவையாகும். (இவற்றில் 99 வீத பொய்யுடன் அரிதாக சில வியங்கள் உண்மையாகவிருக்கலாம். ஆனால் இதை உண்மைப்படுத்தினால் நமது ஈமான் பறிபோய்விடும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.)


ஈமானில் பலவீனமான சிலர் நட்சத்திர சாஸ்திர காரர்களிடம் போய் அவருக்கு நடக்க விருக்கும் திருமணம் மற்றும் எதிர் காலத்தைப் பற்றியெல்லாம் கேட்கின்றனர், இது ஹராமாகும். எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகிறானோ! அல்லது அவ்வாறு வாதிடுபவனை உண்மைப்படுத்துகிறானோ! அவன் இணைவைத்த காபிராவான். சிலர் பத்திரிகை, சஞ்சிகை, தொலை பேசி மூலம் மறைவான ஞானம் இருப்பதாக சொல்வோரிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் கேள்விகளைக் கேட்கின்றனர் இதுவும் ஹராமாகும்.


சூனியம், ஜோஷியம், சாஸ்திரம் அனைத்தும் ஷிர்க்கே ..

சூனியம் என்பது, சில பொருட்கள், புகைகள், வார்த்தை ஜாலங்கள் போன்றவற்றை உபயோகித்து தீய ஷைத்தான்களின் உதவியுடன் சில காரியங்களைச் சாதித்துக் காட்டுவதைக் குறிக்கும். அதற்கு ஒரு உண்மை நிலை-யதார்த்தம் உண்டு. அது மனிதர்களின் உள்ளங்களிலும், உடம்பிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தும். நோய்கள், மரணம், கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவு இப்படியான விளைவுகளை சூனியம் ஏற்படுத்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களைக் குறிப்பிடும் போது: 'ஏழு பெரும் பாவங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று கூற, ஸஹாபாக்கள் அவை என்ன என்று கேட்டனர், அவற்றில் நபியவர்கள்... ... ... ... ... அல்லாஹ்விற்கு இணைகற்பித்தலும், சூனியமும் உள்ளதாகக் கூறினார்கள்.


சூனியத்தில் ஷைத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றனர், அவற்றின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவனின் தீய விருப்பங்களை நிறைவேற்றி, அவற்றின் நெருக்கத்தைப் பெற்று அதன் மூலமே சூனியக்காரன் தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றான். இன்னும் சூனியக்காரர்கள் தமக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றனர். இது இறை நிராகரிப்பும், வழிகேடும் ஒருங்கே இணைந்ததாகும்.


அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான், 'அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெறமாட்டான்'.
(தாஹா 20:69)


சூனியக்காரனுக்குரிய தண்டனை, அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாகும். ஸஹாபாக்களின் காலத்தில் இத்தண்டனை சிலருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரியம! தற்காலத்தில் சூனியத்தை ஒரு குற்றமாகவே கருதாத நிலைக்கு மனிதர்கள் மாறி விட்டனர், இன்னும் அது பல்கலைகழகங்களில் ஒரு கலையாகச் சொல்லி போதித்து பெருமைப்படக்கூடிய நிலையைக்காணமுடிகிறது. அதை செய்யக்கூடியவர்களுக்கு அதில் கை தேர்ந்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. சூனியக்காரர்களுக்கென விழாக்கள் போட்டிகள் என்று நடத்தப்படுகின்றன. அவர்களை ஆர்வப்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் ஆயிரக்ககணக்கான மக்கள் அதில் கலந்துகொள்கின்றனர். இது கொள்கையில் காணப்படும் அலட்சியமே.


சூனியக்காரன் மீது அபூதர் ஜுன்துப் (ரலி) எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது, அவர் ஒரு தலைவருடைய அவைக்குள் நுழைகிறார், அங்கு ஒரு சூனியக்காரன் தனது வாளினால் ஒரு மனிதனின் கழுத்தை வெட்டுவதும் மீண்டும் அதை ஒட்டுவதுமாக மக்களுக்கு மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தான். மறு நாள் அபூதர் (ரலி) தனது ஆடையை அணிந்துக் கொள்கிறார். அதற்குக் கீழ் தம் வாளைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார் பின் அரசரின் அவைக்குள் நுழைகிறார் அங்கு சூனியக்காரன் தனது விளையாட்டுக்களைக் காட்டியவண்னம் இருக்கிறான் மனிதர்களுக்கு முன்னால் சூனியத்தை அரங்கேற்றிய வண்ணம் இருக்கிறான். மக்களோ ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர், அவர் பக்கம் அபூதர் நெருங்கினார் தனது வாளை திடீரென வெளியில் எடுத்தார் அந்த சூனியக்காரனின் கழுத்துப் பக்கம் கொண்டு சென்றார் அவனது கழுத்து பறந்தது சூனியக்காரன் கீழே சாய்ந்தான். அபூதர் (ரலி) கூறினார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் சூனியக்காரனுக்குரிய தண்டனை அவன் வாளால் வெட்டப்படுவதாகும். என்று கூறினார்கள், பின்னர் அவன் பக்கம் ஜுன்துப் (ரலி) திரும்பிப்பார்த்து உன்னால் முடிந்தால் உனக்கு உயிர் கொடுத்துக் கொள்! உனக்கு உயிர் கொடுத்துக் கொள்! என்று கூறினார்கள்.


'எவர் எதிர் காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் அவன் சொல்வதை உண்மைப்படுத்தினால், அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவனாவான். இவ்வியத்தில் எச்சரிக்கையாக இருப்பது கடமையாகும். நிச்சயமாக சூனியக்காரன், ஜோசியக்காரன், சாஸ்திரக்காரன் மனிதர்களின் இறைநம்பிக்கையில் விளையாடுகின்றான். மக்களின் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களாகவோ, அல்லது வலி-ஷெய்கு என்ற போர்வையிலோ மக்கள் முன் அறிமுகமாகி தமது கைவரிசையைக் காட்டுகின்றனர். சிகிச்சை அளிப்பதாகக் கூறி பல வழிகளைக் கையாளுகின்றனர்.

நோயாளியை அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப்பலியிடுமாறு ஏவுகின்றனர். ஒரு ஆட்டை அறுக்கவேண்டும் அது இவ்வாறு இவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் அல்லது ஒரு கோழி அது இவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். இன்னும் சில நேரங்களில் ஷிர்க்குடைய வாசகங்களையும், ஷைத்தானியத்தான பாதுகாப்பு முறைகளையும் தட்டுக்களில் எழுதுகின்றனர். அதைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளுமாறோ அல்லது பெட்டிகளில் போட்டுப் பூட்டி வைக்குமாறோ, அல்லது வீடுகளில் தொங்க விடுமாரோ பணிக்கின்றனர். இன்னும் அவர்களில் சிலர் நல்லடியார்கள் என சொல்லிக்கொண்டு தாம் அற்புதங்களை வெளிப்படுத்துவதாகப் பாசாங்கு பண்ணுகின்றனர்.

ஆயுதங்களால் தங்களுக்குத் தாங்களே தாக்கிக் கொள்வதைப் போல தங்களுக்கு மேலால் வாகனத்தை ஓடச்செய்து அதில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என சொல்வது போல, சில மாயாஜால வித்தைகளைப் பயன்படுத்தி மக்களை மெய்மறக்கச் செய்து ஆச்சரியத்தில் விழி பிதுங்க வைக்கின்றனர். அல்லது அது அல்லாத பல மந்திரங்களைப் பயன்படுத்தி கெட்ட ஷைத்தான்களை வரவழைத்து உண்மையில் சில சூனியங்களைச் செய்கின்றனர். இவ்வாறான நிகழ்வுகளை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து ஷைத்தானுக்குப் பலியிட்டதன் பின்புதான் அவர்களால் நிகழ்த்திக் காட்ட முடியும்.


ஒரு இளைஞன் பிற நாடொன்றுக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.
அவன் கூறுகின்றான், நான் சர்க்கஸ், மெஜிக் நிகழ்ச்சி நடைபெற்ற ஒரு இடத்துக்குச் சென்றேன், பல வகையான விளையாட்டுக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் கயிற்றின் மீது அபாரமான முறையில் நடக்கக்கூடிய ஒரு காட்சியைப் பார்த்தேன் ஒரு சுவரின் மீது கொசு செல்வது போல் ஊர்ந்து சென்று வித்தை காட்டிக் கொண்டிருந்தாள். அவள் செய்யக்கூடிய காரியங்களை மக்கள் வியப்புற்றவர்களாக பார்த்துக்கொண்டிருந்தனர். நான் எனக்குள் இவள் செய்யக்கூடிய ஆச்சரியமான செயல்களை அவள் பெற்ற பயிற்சிகளின் மூலம் ஒருபோதும் செய்ய முடியாது எனவே இவள் கற்ற சூனியத்தின் மூலம், கெட்ட ஷைத்தான்களை வசப்படுத்தியே இந்த வித்தையைச் செய்கின்றாள் என நான் முடிவு செய்து கொண்டேன். நான் இது போன்ற சூனிய மாயா, ஜாலங்களையெல்லாம் நம்புபவன் அல்லன். நான் ஒரு தௌஹீத்-வாதி அல்லாஹ்வை முழுமையாக நம்பி ஷைத்தானுக்கு மாறு செய்பவன். நான் என்ன செய்வது என்ற தடுமாற்றத்தில் இருந்தேன்.

நான் ஒரு தடவை சூனியத்தைப் பற்றி ஆற்றப்பட்ட ஜும்ஆ உரைக்கு சென்றிருந்தேன் அந்த உரையை நிகழ்த்திய அறிஞர் ஷைத்தான்கள் தான் சூனியத்துக்கு பயன்படுத்தப்படுகின்றனர் நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி வீனானது. அல்லாஹ்வுடைய வார்த்தைகளுக்கு முன்னால் அவைகள் அழிந்து போகும் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். எனவே நான் எனது நாற்காலியிலிருந்து எழுந்து அவளை நோக்கி நடந்தேன், மக்களோ வைத்த கண் வாங்காது அவளது மாய வித்தையில் மயங்கி லயித்துக் கிடந்தனர். இடையிடையே கூச்சல் போட்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர், வியப்புற்றவர்களாகக் கைகளை தட்டினர், நான் எழுந்து அவள் பக்கம் சென்றதும் ஆச்சரிய மேலீட்டால்தான் நான் அவளை நெருங்கி செல்கின்றேன் என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள் போலும், சூனியக்காரியை நெருங்கினேன், அவளது முகத்தைப் பார்த்து ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம் உடனே அப் பெண் நிலைதடுமாற ஆரம்பித்தாள் நான் வசனங்களை ஓதி முடிப்பதற்குள் அவள் முகங்குப்புறக் கீழே வீழ்ந்து மூர்ச்சையாகி விட்டாள். மக்களோ திடுக்கத்துடன் எழுந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மற்றும் சிலர் அவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அல்லாஹ்வின் வார்த்தைகள் உண்மையாகி விட்டது:

'நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானது' (அந்நிஸா 4: 76).


'அவர்கள்(அல்லாஹ்வுக்குச்) சதி செய்தார்கள் அல்லாஹ்வும்(அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூலிகொடுப்பதி)ல் மிகச் சிறந்தவன்'. (ஆலுஇம்ரான் 3:54).